இமயத்தின் முன் ஓர் சிறுவனாய் அண்ணாந்து நிற்கிறேன் பிரமாண்டம்! அது ஒன்றுதான் புரிகின்றது.
கலப்பு பிறப்பு இளமை ஒழுக்கம் கல்வி குடும்பம் வாழ்வில் எளிமை
சமூகம் பண்பு சமயம் சேவை தர்மம் சத்தியம். பக்தி அகிம்சை
அரசியல் தொழிலில் அறம் எனப் பலவாய் பாறைகள் அடுக்கிப் பார்க்கவே எட்டா
உச்சமாய்த் திகழும் தியாகப் பாறை எட்டிப் பிடிக்க முடியாத் தெலைவில் எங்கோ முடியாய் இருக்க நானோ
பிரமாண்டத்தின் வைர மலைகளை யானையைப் பார்த்த குருடனைப்போல ஒன்;றொன்றாகத் தொட்டுத்தடவி... ... கூழாங்கற்களாய் உணர்ந்து மயங்கும் முட்டாள்தனத்தில் மூழ்க முடியுமா
ஏனோ எனக்கு எதுவும் புரியவி;லை
கலப்புப் பற்றி காந்தீயம் சொல்கிறது:
இயற்கை உனக்குக் காமக் கிளர்ச்சியை ஏன் அளித்தது மனிதா - அட மயக்கம் பிடித்தோய் அது நீயுன்றன் மக்களைப் பெறத்தானடா
உண்டு உறங்கி உறவில் திளைத்து உடலை உருக்குகிறாய் - நீ கண்டது என்ன காமத்தினால் அதைக் காதலென்றேத்துகிறாய்
உள்ளக் கிளர்ச்சி காதலென்றால் அதை உடலிலேன் காட்டுகிறாய் - உன் கள்ளத்தை ஏனோ புனிதமென்றாக்க கதைபல கட்டுகிறாய்
அன்பினில் இன்பம் உண்டு அது உடல் ஆசையில் இல்லையடா - உன் துன்பம் மறக்க காமத்தை நாடும் துர்க்குணம் விட்டிடடா'
ஏனோ எனக்கு எதுவும் புரியவில்லை
பிறப்பிற்காகத்தான் கலப்பா? நாமென்ன ஆடுமாடுகளா
தோன்றிய முதல் மனிதனே துணையோடு தானே படைக்கப்பட்டான்!
பாவக்கனியைத் தின்று அவன் பரம்பரையை விருத்தியாக்கட்டுமென்று சிருஷ்டிப்பை இரண்டோடு நிறுத்தி
உன்னில் பழிவராமல் விலகிக் கொண்ட கர்த்தாவே! நீ பாவக் கனியில் வைத்தது சுவையை மட்டுமா? அப்படியானால் அன்பும் காதலும் எங்கிருந்து வந்தது?
மகாத்மாக்களுக்காகவே இப் பூமி படைக்கப்ப்டிருந்தால் எம்போன்ற சாமான்ய மனிதர்கள் எங்கு போவார்கள்
ஏனோ எனக்கு எதுவும் புரியவில்லை
உன் ஒரு கன்னத்திலடித்தால் நீ மறு கன்னத்தையும் நீட்டு என்று போதித்தவர்களுக்கே காந்தீயம் அகிம்சைப் பாடம் நடத்தியபோது
வன்முறையைத் தானே பரிசாய்ப் பெற்றுக்கொண்டது
காந்தீயமே வெள்ளைக் காரன் உனக்கு விடுதலையைப் பரிசாகத் தந்தான் என்று பீற்றிக் கொள்ளாதே
கட்டியாளமுடியாமல் கைவிட்டுப்போனான்
சூரியனே அஸ்தமிக்காது பரந்திருந்து
உலக யுத்தத்தின் தகைப்பினால் ஒடுங்கிப் போன சாம்ராச்சியம்
உனது அகிம்சா நெருப்பைக் காரணங்காட்டி ஒதுங்கிக் கொண்டது தோல்வியை வெற்றிகரமாக ஒத்துக்கொண்டது
வெள்ளைக் காரனுக்குப் பாடம் கற்பித்த காந்தீயமே! எமது ஈழமண்ணைத் துவம்சம் செய்ய வந்த உனது தாய்நாட்டின் வானரங்களுக்கு நீ எதைப் போதித்தாய்
இன்றுவரை இன்னல்படும் ஈழத்து ஏதிலிகளின்மேல் ஏவி விடப்படும் வன்முறைக்குப் பின்புலமாய் எங்கள் சுய ராஜ்ய வேட்கையை
ஊதியணைக்கத் துணைபோகும் உன் தாய்நாட்டில் நீ இன்று செல்லாக்காசு
உலகத்தின் உச்சதர்மமென்று உன்னை உயர்த்தி நினைக்க எனக்கெப்படி முடியும்?
ஏனோ எனக்கு எதுவும் புரியவில்லை